×

கட்டாய திருமணத்துக்காக பிளஸ்-2 மாணவி காரில் கடத்த முயற்சி: போக்சோ வழக்கில் தாயுடன் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தேவூர் அரசிராமணி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது உறவினர் சங்ககிரி குள்ளம்பட்டி சின்னமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் சுரேஷ் (எ) சுப்பிரமணி (29). பெங்களூருவில் உள்ள ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். மாணவியின் குடும்பத்திற்கும், இன்ஜினியர் சுரேஷ் குடும்பத்திற்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இருந்தாலும் கடந்த 6 மாதத்திற்கு முன் பிளஸ்-2 மாணவியிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி சுரேஷ் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பிளஸ்-2 மாணவி, பால் ஊற்றுவதற்காக தனது சைக்கிளில் இடைப்பாடி-குமாரபாளையம் சாலையில் வல்லூற்று பெருமாள் கோயில் பிரிவு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இன்ஜினியர் சுரேஷ், ஒரு காரில் வந்து மாணவியை கடத்த முயன்றார். இதனால், மாணவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே மாணவியை விட்டுவிட்டு, சுரேஷ் தப்பிச் சென்றார்.
இதுபற்றி தேவூர் போலீசில் மாணவி புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பிளஸ்-2 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொள்ள காரில் கடத்த முயற்சித்தது தெரியவந்தது. இதற்கு இன்ஜினியர் சுரேஷின் தாய் பூங்கொடி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து மாணவியை கடத்த முயன்ற இன்ஜினியர் சுரேஷ், அவரது தாயார் பூங்கொடி (54) ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கட்டாய திருமணத்துக்காக பிளஸ்-2 மாணவி காரில் கடத்த முயற்சி: போக்சோ வழக்கில் தாயுடன் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Devur Arasiramani ,Sangakiri ,Muniyappan ,Suresh (A ,Chinnamariamman Koil Street ,Sangakiri Kullambatti ,
× RELATED சங்ககிரி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் மருத்துவ மாணவர் பலி..!!